அகில இந்திய முதல்வர்கள் சங்கம் மற்றும் கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து 18வது சர்வதேச கருத்தரங்க மாநாட்டினை 'தேசிய மற்றும் சர்வதேச வளர்ச்சியில் உயர்கல்வியின் பங்கு" என்னும் தலைப்பில் இரண்டாவது நாளாக அக்கல்லூரியில் இன்று நடத்தியது.

இதில் அமெரிக்காவில் இருந்து டெலிகாம் இன்வென்டர் நிறுவனர், தேசிய அறிவுசார் நிறுவன தொழில் நிறுவனர் மற்றும் ஆலோகர் முனைவர். சாம்பிட்ரோடா காணொலி கண்காட்சியின் மூலம் இந்தியாவில் உள்ள கல்லூரி முதல்வர்களுக்கு உரையாற்றினார்.
இதில் அவர் பேசிய போது, இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கே அரசியல் கற்றுக் கொடுக்கும் வேந்தர்களாக பல்கலைக்கழக வேந்தர்கள் மாறிவிட்டார்கள். கல்வித்துறையில் உயர்பதவி அடைய அரசியல்வாதிகளின் துணை வேண்டிய நிலை இந்திய கல்வித்துறை வளர்ச்சியினை பின்நோக்கி செல்ல வைத்துள்ளது.
ஆராய்ச்சிகளின் மூலம் உருவாகும் சாதனைகள் மற்றும் படைப்புகள் மிகவும் குறைந்து வருகின்றன. கல்வித்துறை வளர வேண்டுமானால் திறமையானவர்களுக்கு மட்டும் உயர் பதவியினை வழங்க வேண்டும்.
இந்திய உயர்கல்வித்துறை முற்றிலும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் ஆக்கிரமப்பட்டுள்ளது. இந்தியாவில் உயர் கல்வித்துறை மிகவும் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தராக செல்ல வேண்டுமானால் அரசியல் செல்வாக்கில்லாமல் செல்ல முடியாது. இந்தநிலை நீடித்தால் தலைச்சிறந்த திறமையான கல்வியாளர்கள் இந்தியாவில் கல்வித்துறையில் உயர் பதவியினை திறமையால் அடைய முடியாது.
இதனால் கல்வித்தரம், ஆராய்ச்சி கீழே தள்ளப்பட்டுள்ளது. கரைபடிந்த கல்வியாளர்களால் கல்வித்துறையில் மாற்றத்தினை மற்றும் மறுமலர்ச்சியினை உறுதியாக கொடுக்க முடியாது.
எதிர்காலம் தொழில் நுட்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ரோபோக்கள் நம்மை ஆளும் காலம் வந்துவிட்டது. இந்த நிலையில் அரசியல்வாதிகளால் உயரிய பொருப்பினை அடைந்த இவர்கள் வளர்ச்சிக்கு பாடுபடமாட்டார்கள்.
கற்றல் முறையிலும் இன்னும் நாம் பழைய நிலையிலேயே உள்ளோம். வளர்ந்த நாடுகள் கல்வித்துறையில் தொழில் நுட்பத்தினை கொண்டுவந்துவிட்டார்கள். ஆராய்ச்சியும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய படைப்புகள் குறைந்து வருகின்றன. ஆராய்ச்சியின் பயன்பாடும் மிகவும் குறைந்து வருகிறது.
கல்வித்துறையில் உயர் பதவியினை அடைய திறமை மட்டும் பயன்படுத்த வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார். திறமையான பேராசிரியர்கள் திறம்பட செயல்பட முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். நேர்மையான கல்வியாளர்களின் பங்கு குறைந்து வருகிறது மட்டும் அல்ல இவர்களின் திறமையினை வளர்க்க விடுவதில்லை.
இதற்காக கல்லூரி முதல்வர்கள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள் இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு கல்வித்துறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனக் கூறினார்.

இக்கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர். கி.சுந்தரராமன், இக்கல்லூரியின் முதல்வர் முனைவர். பாபாஞானக்குமார் இக்கருத்தரங்கினை வழிநடத்தினார்.
இம்மாநாட்டில் இந்தியாவிலிருந்து பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தலைசிறந்த கல்வியாளர்கள் என மொத்தம் 300 பேர் கலந்து கொண்டனர்.